தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
கோவை தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி செவிலியர் தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிந்தால் அதற்காக குறைந்தது மாநகராட்சி பகுதிகளில் 39 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 35 ரூபாயும் ஊதியமாக தர வேண்டும்.
அவர்கள் 8 மணி நேரம் பணிக்கு முறையே 8 ஆயிரத்து 50 ரூபாயும், 7 ஆயிரத்து 246 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல், தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் நகரங்களைப் பொறுத்து 7,823 ரூபாய் மற்றும் 7,041 ரூபாய் ஊதியம் தர வேண்டும். துணி துவைப்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்களுக்கு மாநகராட்சி பகுதிகளில் 7,535 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 6,836 ரூபாயும் ஊதியமாக தர அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டிலேயே தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு இதை விட கூடுதலாக 10% ஊதியம் அளிக்க வேண்டும். அரசு நிர்ணயித்ததை விட குறைவாக ஊதியம் அளித்தால் அது மனித உரிமை மீறலாக கருதப்படும். அதன்படி வேலை வழங்கும் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.