விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்.

 

இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (ஹைசிஸ்) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் 380 கிலோ எடை கொண்டதாகும்.

இந்தச் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட்டில் அனுப்பியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஸ்பெயின், ஃபின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து நாடைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 504 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *