இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார்.
அவரை நாடு கடத்தி இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இந்திய அரசின் கோரிக்கைப் படி விஜய் மல்லையாவை நாடு கடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ, அமலாக்கத்துஐற அதிகாரிகள் ஞாயிறன்றே லண்டன் சென்றனர். மல்லையாவுக்கு எதிரான தீர்ப்பு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது. மல்லையாவுக்காக மும்பை ஆர்தர் சாலை சிறை உயர்பாதுகாப்பு வசதிகளுடன் தயாராக உள்ளது.
மேல்முறையீடு செய்ய விரும்பாத பட்சத்தில் அவர் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்தியா அழைத்து வரப்பட வாய்ப்புள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் உள்ளது. அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து சட்டப்படி அவரைக் கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.