கணிக்கப்பட்டதை விட கஜா புயலானது வலுவாக கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
கஜா புயலானது தமிழகத்திற்கு மிக அருகில் நாகையின் வடகிழக்கே 138 கிமீ தொலைவில் வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலையொட்டி பாதிப்புள்ளதாக கருதப்படும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புயலானது 100-120 கிமீ வேகத்தில் நள்ளிரவில் வலுவாக கரையைக் கடக்கும் என்று வெதர்மேன் கணித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் விரிவாக தகவல்களை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கஜா புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, கடலூர் – வேதாரண்யம் இடையே வலுவாக 100-120 கிமீ வேகத்தில் நள்ளிரவில் வலுவாக கரையைக் கடக்கும்.
இதனை நாம் தற்போது வர்தா புயலுடன் ஒப்பிடலாம். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் இந்தப் புயலின் தாக்கம் இருக்கும். குறிப்பாக நாகை மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இருக்கும்.
வேதாரண்யத்தை புயல் கரையைக் கடக்கும் போது 100-120 கிமீ வேகத்தில் வேகமாக காற்று வீசும். நாகை மற்றும் வேதாரண்யம் இடையே புயல் கரையைக் கடக்கும். கஜா புயல் தற்போது தமிழக கடல் எல்லையில் இருந்து 150-175 கிமீ தொலைவில் உள்ளது. 25-30 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கரையை எட்டுவதற்கு இன்னும் 6 மணி நேரம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் – டெல்டா மாவட்ட பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளில் வந்த சில புயல்கள் பற்றிய தகவல்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம்
2011 – தானே புயல் – கடலூர் – 140 கி.மீ வேகம்2008 – நிஷா புயல் காரைக்கால் – 65 கி.மீ வேகம் (தஞ்சை ஒரத்தநாடில் 657 மி.மீ மழை)
2000 – கடலூர் 120 கி.மீ வேகம் (தொழுதூரில் 454 மிமீ மழை)
1993 – காரைக்கால் 167 கிமீ வேகம்
1991 – காரைக்கால் 120 கிமீ வேகம்