திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக கலைஞரான கவிப்பேரரசு வைரமுத்துவின் 65வது பிறந்த நாள் இன்று.
புழுதிக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த புதுக்கவிதை இது. கரடு முரடான கள்ளிக்காட்டை உலகறியச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர். கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ்த் திரையுலகை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. 1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது.
“எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் பிரசவம் நடந்தது” என இதையும் தனக்கேயுரிய தமிழில் புன்னகையுடன் நினைவு கூறுவார் வைரமுத்து. ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்து இவர் எழுதிய எண்ணற்ற பாடல்கள், இன்றும் இந்த கூட்டணி தொடர்ந்திருக்க கூடாதா என இசைப் பிரியர்களை ஏங்க வைக்கும் ரகம்.
அதே போல், ஏ.ஆர்.ரகுமானின் வருகைக்கு பின்னரே தன் தமிழ் சர்வதேச எல்லைகளை கடந்ததாக பலமேடைகளில் வைரமுத்து கூறியுள்ளார். 37 ஆண்டுகளில் 6000-க்கும் மேற்பட்ட பாடல்கள்…7 தேசிய விருதுகள். 6 மாநில அரசு விருதுகள். 2 பத்ம விருதுகள் என விருதுகளின் விருப்ப நாயகனானவர் இவர்…திரைப் பாடல்களோடு நின்று விடவில்லை இவர் பேனா, நாவல்கள், கவிதை, கட்டுரை என இவரின் இலக்கியப் பயணம் உலகை கடந்தது.
தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் போன்றவை காலம் கடந்தும் வைரமுத்துவைப் பற்றி பேசவைக்கும் படைப்புகள். காதல், சோகம், கொண்டாட்டம், தத்துவம் என பல தளங்களில் பாட்டெழுதியவர் வைரமுத்து.
சிவாஜி கணேசனில் தொடங்கி விஜய் சேதுபதி வரை தலைமுறைகளை கடந்து தமிழ் தந்து கொண்டிருக்கும் கவிஞர் இவர். ரேடியோ, ஒலிப்பேழை, ஐபோன், ஐபாட் என தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. அத்தனையும் ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கிறார் வைரமுத்து.