தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் இருந்து அடுத்த மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் மற்ற மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும் என 20 ஆயிரத்து 567 பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். அதே போன்று பண்டிகை முடிந்து திரும்ப சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 4 ஆயிரத்து 207 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 7 ஆயிரத்து 635 பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை முன்பதிவு நடைபெறும் என்று தெரிவித்த அவர், கோயம்பேட்டில் 26 முன்பதிவுக் கவுண்டர்கள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி மற்ரும் மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா 1 கவுண்டர் செயல்படும் என்று கூறினார். கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அண்ணாநகருக்குப் பதிலாக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு பதில் கே.கே.நகரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருவண்ணாமலை செல்பவர்கள் கோயம்பேடு மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.