திருச்சி விமான நிலையத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்புகொண்ட 1835 கிராம் கடத்தல் தங்கமும், வெளிநாட்டிற்கு கடத்தமுயன்ற 8 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சென்னையைச் சேர்ந்த நிஜாம் மைதீன் , மசார் உசேன், முஹம்மது ஆரிப் , அப்துல் கரீம் ஆகிய 4 பேரும் தங்கத்தை பொடி செய்து பேஸ்ட் வடிவில் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 56 லட்சம் ரூபாய் மதிப்புகொண்ட கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, திருச்சியிலிருந்து இலங்கைக்கு செல்லத் தயாராக இருந்த விமானத்தில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், திருச்சியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் 8 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட சவுதி ரியால் மற்றும் ஓமன் ரியாலை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சித்ததையும் கண்டுபிடித்தனர்.