தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை என்ற நீதிபதிகள், தாஜ்மகாலை பாதுகாக்க விருப்பம் இல்லாவிட்டால் அதனை இடித்து விடுங்கள் என்று மத்திய அரசு வழக்கறிஞரை கண்டித்தனர்.
தாஜ்மகால் மாசுபட என்ன காரணம், அதனை தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற 31-ஆம் தேதி முதல் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.