தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், உயிரிழப்புகள் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில் தற்போது சென்னையை அடுத்த தாம்பரம் சந்தோஷபுரத்தை சேர்ந்த 32 வயதான ஸ்ரீதர் என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தனுஸ்ரீ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலைகளில் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
(பைட்ஸ்) (இருந்தால் போடவும்)
இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைகளுக்கு 837 ரத்த அணுக்களை பரிசோதனை செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவியிருந்த டெங்கு காய்ச்சல் தற்போது தென்மாவட்டங்களிலும் பரவி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்