தமிழகத்தில் காவிரியின் கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு விழா மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் கழனிகளில் விதைகளைத் தூவி புதிய பயிரிடும் இந்த காலத்திற்கு தனி விசேஷங்கள் உண்டு .
ஆடிப்பெருக்கு தினத்தில் பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விடுவார்கள். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலிக் கயிறு அணிவார்கள்.
ஆறு ஓடும் இடமெல்லாம் இன்று திருவிழாவாக காட்சியளிக்கும். ஆற்றங்கரைகளில் கூடி பெருக்கை கண்டு களிப்பதும் வழக்கம். கரைபுரளும் காவிரியில் பல ஆண்டுகளாக வறண்ட நிலையே காணப்பட்டது.
இந்த ஆண்டு இயற்கையின் கருணையால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி பாசனப்பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் இன்று ஆடித்திருவிழாவை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுகின்றனர். பாதுகாப்புடன் நீராடவும், வழிபாடு நடத்தவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.