தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை… பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நேற்று மாலையில் திடீரென கனமழை பெய்தது. நகரப் பகுதியில் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, வேடல், செவிலிமேடு, பூக்கடைச் சத்திரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் நீங்கி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்துள்ள நிலையில், மழையும் பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் நீங்கியது. இதனால், பொதுமக்களும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் கனமழை பெய்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் தண்ணீரின்றி வாடிக்கிடந்த மானாவரி பயிர்கள் செழிக்க இந்த மழை உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பதாகைகள் மற்றும் விளம்பர பதாகைகள் கீழே விழுந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *