தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், சென்னையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது சென்னை, தாம்பரம், மீனம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சூளைமேட்டைச் சேர்ந்த அரிகரராஜன் என்பவர் நேற்று இரவு மழை பெய்த நிலையில், வீட்டின் கேட்டைத் திறக்க முயன்ற போது, அதில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலையில் அதிக மேகமூட்டம் உருவான நிலையில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எதிர்பாராத பலத்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக சாரல் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தின் பல இடங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.