கடந்த ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட திருமுருகன் காந்தி, அதில் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிந்த நிலையில், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிகிறது.
இதனிடையே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய நிலையில் அவர் விமானம் மூலமாக நேற்று பெங்களூரூ வந்தடைந்தார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெங்களூரு விரைந்த தமிழக காவல்துறையினர், திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்தனர். தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருப்பதால் திருமுருகன் காந்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.