சசிகலா கணவர் ம.நடராசன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

 

சசிகலா கணவர் ம.நடராசன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

நெஞ்சுவலி காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

ம.நடராசன் யார்?

தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அக்.23, 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்

கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை நடராசன் முன்னெடுத்து நடத்தியவர். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை நடராசன் ஈர்த்தார்

அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன்

நடராசன்- சசிகலா திருமணம்

மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். சசிகலா- நடராசன் திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்

ஜெயலலிதாவின் அறிமுகம்

சந்திரலேகா மூலம் நடராசன்- சசிகலா தம்பதிக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனார்

1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது

கணவர் நடராசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் சசிகலா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி சசிகலா இன்று மனு அளிக்க உள்ளார். நடராசனின் இறப்பு சான்றிதழை கொடுத்தவுடன் சசிகலாவுக்கு பரோல் தரப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பது குறிப்பிடத்தக்கது

நடராசன் உடல் அஞ்சலி

சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடராசன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதனையடுத்து அவர் உடல் சொந்த ஊரான விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *