நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரியை விமர்சித்ததற்கு எதிர்க்கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நீண்ட நேரம் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி சப்தமிட்டு சிரித்தார். இதனையடுத்து மக்களவை தலைவர் அதனை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் ராமாயணத்துக்கு பிறகு நீண்ட சிரிப்பை நாம் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ராமாயணத் தொடரில் எதிர்மறையான பெண் கதாபாத்திரம்தான் இதுபோன்று சப்தமாக சிரிப்பதாகக் காட்டப்படும் என்றும் மோடி விமர்சித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் கருத்துக்கு ரேணுகா செளத்ரி எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது அவர் , சிரிப்பதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் தொடர்ந்து சிரித்து கொண்டே இருப்பேன் என்றும் கூறினார். மேலும் பெண்ணை இழிவுப்படுத்தும் விதமான வார்த்தைகளை பயன்படுத்திய மோடிக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
2018-02-09