எடியூரப்பா பதவி ஏற்றது ஜனநாயகப் படுகொலை! – திருமாவளவன்

கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பலம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்ததன் மூலம் கர்நாடாகாவில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆட்சி அமைப்பதற்கு 112 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில்  பாஜகவுக்கு 104 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த கூட்டணியின் தலைவராக எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களின் பட்டியலையும் கடிதங்களையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார். ஆட்சி அமைப்பதற்கு அவரைத்தான் ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்; மாறாக எடியூரப்பாவை ஆளுநர் முதலமைச்சராக்கி இருக்கிறார். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான குற்றமாகும்.

இந்தப் பிரச்சனையை அவசர வழக்காக ஏற்று இன்று அதிகாலை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் அளித்த உச்சநீதிமன்றத்தை நாம் பாராட்டுகிறோம். சுமார் மூன்று மணி நேரம் பொறுமையாக நீதிபதிகள் வாதங்களை கவனித்துள்ளனர். அதற்காக நன்றி சொல்கிறோம். ஆனால், எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அது அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பதவி ஏற்பு நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதுதான் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தாலும் தன் கண் முன்னால் அரங்கேற்றப்படும் ஒரு அவல நாடகத்தை நீதிமன்றம் தடுக்கத் தவறிவிட்டது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறோம். இதே நிலை 2019 பொதுத் தேர்தலின்போதும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை பாஜகவின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல் பாதுகாப்பது அந்த கட்சிகளின் பொறுப்பு மட்டுமல்ல, கர்நாடக மக்களின் கடமையும்கூட. நாளை நடைபெறவுள்ள விசாரணையிலாவது நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *