ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சண்டையிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், 6000 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்காகவும், பிற தேசத்தினருக்காகவும் அமெரிக்கா பல ஆயிரம் கோடி டாலர்களை செலவிடும் நிலையில், அண்டை நாடுகளான இந்தியா, ரஷ்யா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானில் சண்டையிடவில்லை என கூறினார்.
வெறும் 100 முதல் 200 வீரர்களை மட்டுமே அனுப்பிவிட்டு அமைதியை நிலைநாட்டுவதாக பல நாடுகளின் தலைவர்கள் தம்மிடம் கூறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் உள்ள நல்லுறவையும் சுட்டிக்காட்டிய டிரம்ப், அவர் ஆஃப்கானிஸ்தானில் நூலகம் கட்டி வருவதாகத் தொடர்ந்து கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நூலகம் கட்டுவதை புத்திசாலித்தனம் என மோடி கூறினாலும், அதனால் என்ன பயன்? ஆப்கானிஸ்தானில் உள்ள நூலகத்தில் யார் படிப்பார்? என வினவியுள்ளார்.