அழகுநிலையத்திற்குள் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலர்

பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்யா, நகரின் 3 இடங்களில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். அவரது அழகுநிலையம் அருகே வசித்து வரும் திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் என்பவருக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி, சத்யா செல்வக்குமாரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், நீண்ட நாளாகியும் அதனை திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் அழகுநிலையத்திற்குள் புகுந்து சத்யாவை கடுமையாகத் தாக்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சத்யாவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களை பொருட்படுத்தாத செல்வக்குமார், ஒரு கட்டத்தில் சத்யாவை சுவற்றில் இடித்து கீழே தள்ளி, கொடூரமான முறையில் தாக்கினார்

பலத்த காயமடைந்த சத்யா அளித்த புகாரில் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் செல்வக்குமார் சத்யாவை தாக்கியதாக அளித்த புகாரில், அவரை பெரம்பலூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *