இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னம் முடக்கப்பட்டு 5 மாதங்கள் ஆவதால், கட்சியின் பணிகள் முடங்கிக் கிடப்பதாகவும், இதனால் கட்சியின் தொண்டர்களிடயே குழப்பம் நிலவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் பிளவு ஏற்பட்ட போது பெரும்பான்மை ஆதரவு உள்ளவருக்கே கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது என்றும், இந்த முறையை பின்பற்றி, அதிமுகவிலும் அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலைச்சின்னம் தொடர்பான பிரச்சனையில் இவ்வளவு கால தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் குறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.