சென்னை அண்ணா பல்கலை கழக தேர்வு தாள் மறு மதிப்பீடு முறைகேட்டில் 240 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர்.
593 பொறியியல் கல்லூரிகளின் தலைமையிடமாக உள்ள சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் மூன்று லட்சத்து 2 ஆயிரம் பேர் மறு மதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பம் செய்தனர்.
அவர்களில் 90 ஆயிரம் பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தை விட மிக அதிகமானவர்கள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், பல்கலை கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, உள்ளிட்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.